×

செய்யாறு அருகே பரபரப்பு வெறிநாய் கடித்ததில் 13 பேர் காயம் கிராம மக்கள் அச்சம்

செய்யாறு, ஜன.8: செய்யாறு அருகே வெறிநாய் கடித்ததில் 13 பேர் காயம் அடைந்தனர். இதனால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள் அந்த நாயை பிடித்து செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாறு நகரையொட்டிள்ள கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் நேற்று வெறிபிடித்த நாய் ஒன்று தெருக்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது. அந்த நாயானது அவ்வழியாக பைக் மற்றும் நடந்து சென்ற பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்தது. இதில் பசுமாடு மற்றும் 13 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, காயமடைந்த விஜயலட்சுமி(46), சத்தியவாணி(56), சரவணன் (52), பெருமாள்(50), முத்துக்குமார்(35), பரமேஷ்வரன்(24), கோதண்டன்(58), கன்னியப்பன் உள்ளிட்டவர்கள் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்ததும் வீடு திரும்பினர். முன்னதாக, காயமடைந்த பொதுமக்களை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா பாரி சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஒரே நாளில் 13 பேரை வெறிநாய் கடித்துள்ளதால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், இதேபோன்று கிராமத்தில் சுற்றித்திரியும் 100க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து செல்ல ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : rabies raid ,Cheyyar ,
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...