குலசேகரம்: குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று அகில இந்திய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெற்று வரும் பொது விநியோக திட்டத்தை சீர்குலைக்காமல் பாதுகாத்தல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்ட திருத்தங்களை மேற்கொள்வதையும், பெரும் சலுகைகளை வாரியிறைப்பதையும் கைவிட்டுவிட்டு பொதுமக்களின் நலனில் அக்கறை செலுத்துதல், புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை ரத்து செய்தல், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு முறையான பென்ஷன் வழங்குதல், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு நிறுவனங்களை சீரழிப்பதை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிடுதல், விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு நியாயமான சந்தை விலை கிடப்பதை உறுதி செய்தல், முறைசாரா தொழிலாளர்கள் அனைவரும் நலவாரியத்தில் இணைத்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து எல்.பி.எப், ஐ.என்.டி.யு.சி., சி.ஐ.டி.யு.
ஹெச்.எம்.எஸ்., எ.ஐ.டி.யு.சி., எ.ஐ.சி.சி.டி.யு., யு.டி.யு.சி., உட்பட இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இணைந்து ஒரு நாள் முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. குமரி மேற்கு மாவட்டத்தில் குலசேகரம், குழித்துறை ஆகிய பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெறும். பொதுமக்களின் உரிமைக்கான இப்போராட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போராட்டத்தின் மற்றொரு பகுதியாக பொதுமக்கள் நண்பகல் 12 மணி முதல் 12.10 வரை 10 நிமிடம் வாகனங்களை இயக்காமல் சாலை ஓரங்களில் நிறுத்தி போராட்டத்திற்கான ஆதரவை அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.