காஞ்சிபுரம், ஜன.7: காஞ்சிபுரம் மாவட்டம், அரும்புலியூர் ஊராட்சி, பழவேரி கிராமத்தில் அரசு அதிகாரி இல்லாமல் விடப்பட்ட சுண்ணாம்புகுள மீன் ஏலத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், கலெக்டர் பொன்னையாவிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் மாவட்டம், பழவேரி கிராமத்தில் உள்ள சுண்ணாம்புகுளம் மீன் ஏலம் பாஸ்கர் என்பவர் தலைமையில் விடப்படும் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. அங்கு சென்ற கிராம மக்கள், மீன் ஏலம் அதிகாரிகள் முன்னிலையில்தான் விட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பாஸ்கர் என்பவர், பழவேரி ஊராட்சிக்கு நான்தான் அதிகாரி என கூறி, கேள்வி கேட்டவர்களை தாக்க முயற்சித்துள்ளார். இதை தொடர்ந்து ஏலம் நடந்து, சண்முகம் என்பவர் 6500க்கு ஏலம் எடுத்துள்ளார். பொது சொத்தான கிராம குளத்தை எந்த அதிகாரிகளும் இல்லாமல் தனிநபர் சிலர் மீன் ஏலம் விட்டுள்ளனர். எனவே, இந்த சுண்ணாம்பு குளம் மீன் ஏலத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.