வி.கே.புரம், ஜன. 7: பாபநாசம் தலையணை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாபநாசம் கோவிலின் மேற்கு பகுதியிலிருந்து 1கிமீ தொலைவில் பாபநாசம் தலையணை பகுதி உள்ளது. தற்பொழுது பாபநாசம் தலையணையில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தலையணைக்கு செல்லும் வழியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் ஏராளமானவர்கள் குளித்து வருகின்றனர். இப்பகுதியில் ஆழம் சற்று குறைவாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் பாபநாசம் கோயிலின் மேற்கு பகுதியில் இருந்து தலையணை அருகே உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாதை சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இச்சாலையில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.