×

சேலம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் போலீஸ்காரர் குற்றவாளி

சேலம், ஜன.7: சேலம் அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சேலத்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரை கடந்த 2016ம் ஆண்டு மர்மநபர்கள் கொலை செய்தனர். இதுபற்றி அவரின் மனைவி சாந்தி, காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி, இக்கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (29), அவரது தந்தை ராஜமாணிக்கம், உறவினர் கன்னியப்பன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். ஆனால், சேலம் மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் சக்திவேல் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சாந்தி புகாரில் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் போலீஸ்காரர் சக்திவேல் மீது காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு ஏதும் பதிவு செய்யவில்லை.

இவ்வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 6ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி ஆபிரகாம் லிங்கன் முன் கொலையுண்ட ராமச்சந்திரனின் மனைவி சாந்தி சாட்சியம் அளித்தார். அப்போது, தனது கணவர் கொலையில் போலீஸ்காரர் சக்திவேலுக்கு தொடர்பு உள்ளது. அவர் மீது புகார் கொடுத்தும் போலீசார், வழக்கில் சேர்க்கவில்லை. அவரை விட்டுவிட்டனர், எனக்கூறியுள்ளார். இதன்பேரில், சேலம் மாநகர ஆயுதப்படை போலீஸ்காரர் சக்திவேலை குற்றவாளியாக வழக்கில் சேர்த்து, அவரை ஜனவரி 6ம் தேதி (நேற்று) கோர்ட்டில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுபடி, நேற்று போலீஸ்காரர் சக்திவேல், கோர்ட்டில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

Tags : policeman ,Salem ,
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...