×

வெண்ணந்தூர் அருகே கோயிலுக்குள் புகுந்து உண்டியல் பணம் கொள்ளை

ராசிபுரம். ஜன.7:  வெண்ணந்தூர்  அருகே கோயிலுக்குள் புகுந்து மர்ம ஆசாமிகள் உண்டியல் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வெண்ணந்தூர்  அருகே மின்னக்கல் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் சுவாமி கோயில் கடந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, தினசரி கோயிலில் பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோயிலை பூட்டி விட்டுச் சென்றனர். பின்னர், நேற்று காலை கோயிலை திறப்பதற்காக சென்றபோது உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பூசாரி திடுக்கிட்டார். இதுகுறித்து வெண்ணந்தூர் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து ₹20 ஆயிரம் காணிக்கை பணத்தை அள்ளிச் சென்றிருப்பது தெரிய வந்தது. அவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், வெளியூரில் இருந்து வந்து கைவரிசை காட்டினரா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vandalur ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்