சிவகங்கை, ஜன. 7: சிவகங்கை அருகே ஊராட்சி செயலரை உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் மர்மநபர்கள் தாக்கினர். அல்லூர் ஊராட்சி மன்றத்தில், ஊராட்சி செயலராக பாலமுருகன்(40) பணிபுரிந்து வருகிறார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் இவர் அல்லூர் ஊராட்சியில் வார்டு உறுபபினருக்கு போட்டியிட்ட ஒரு பெண் வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த மற்றொரு பெண் வேட்பாளர் தரப்பினருக்கும், பாலமுருகனுக்கும் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை அல்லூருக்கு சென்று கொண்டிருந்த பாலமுருகனை வழிமறித்து ஒரு கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்த பாலமுருகன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர்.