×

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 7: பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத டிஜிட்டல் பேனர் வழக்கு மற்றும், பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் பேனர் விழுந்து சுபஸ்ரீ  உயிரிழந்த வழக்கு மற்றும்,  1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவரது தந்தை தொடுத்த வழக்குகள், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், பள்ளிக்கரணையில் உரிய அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்க தவறிய பள்ளிக்கரணை ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,  சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

சுபஸ்ரீ உயிரிழப்புக்கான இழப்பீட்டை  பொறுத்தவரை, அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம், அரசியல் கட்சிகள் சார்பில்ரூ.7 லட்சம் வழங்கபட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய்  இழப்பீடு கேட்டு அவரது தந்தை அளித்துள்ள விண்ணப்பம் பரிசீலினையில் உள்ளது என்று தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப தந்தை அளித்த விண்ணப்பத்தை 4 வாரத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, பேனர் விவகாரம்  தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Supreme Court ,government ,Tamil Nadu ,Subasri ,
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்