×

அனகாபுத்தூரில் மாயமான எலக்ட்ரீசியன் ஆந்திராவில் சடலமாக மீட்பு கள்ளக்காதல் விவகாரத்தில் கொல்லப்பட்டது அம்பலம்: தம்பதி பரபரப்பு வாக்குமூலம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் மாயமான எலக்ட்ரீசியன் ஆந்திராவில் சடலமாக மீட்கப்பட்டார். கள்ளக்காதல் விவகாரத்தில் அவரை ஆந்திரா வரவழைத்து கொலை செய்த ஜோடியை நேற்று முன்தினம் சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், லேபர் பள்ளி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42). எலக்ட்ரீசியன். கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது உறவினர்கள் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து கார்த்திகேயனை தொடர்ந்து  தேடி வந்தனர். மேலும் அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து, கடைசியாக கார்த்திகேயன் யாரிடம் பேசினார் என்ற தகவலை எடுத்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதில், மாயமான அன்று மட்டும் ஒரே எண்ணில் அதிக நேரம் கார்த்திகேயன் பேசியது தெரியவந்தது.

அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில் அது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், எஸ்.சி காலனி, இரண்டாவது தெருவை சேர்ந்த சிவகுமார் (38) என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. இதையடுத்து சிவகுமார் மற்றும் அவரது மனைவி மாதேஸ்வரி ஆகியோரை சங்கர் நகர் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் பேசிய சிவகுமார், அந்த எண் கடந்த ஒரு மாதத்திற்கு முன் காணாமல் போய் விட்டதாகவும், கார்த்திகேயன் தனக்கு யார் என்றே தெரியாது என்றும் கூறினார். பின்னர் சிவகுமாரின் மனைவி மாதேஸ்வரியை போலீசார் தனியாக அழைத்து விசாரிக்கையில் அவர் தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், மாதேஸ்வரியிடம் “முறைப்படி” விசாரிக்கையில், கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கார்த்திகேயனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

மேலும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாவது: அனகாபுத்தூரில், கார்த்திகேயன் வீட்டு அருகில் சிவகுமாரின் சகோதரர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவரது வீட்டிற்கு, சிவகுமார் மற்றும் அவரது மனைவி மாதேஸ்வரி ஆகியோர் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு விருந்திற்கு வந்துள்ளனர். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் என்ற முறையில் கார்த்திக்கேயனிடம், மாதேஸ்வரிக்கு  பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. இரவு நேரங்களில் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதனை தனது செல்போனில் கார்த்திகேயன் புகைப்படம் எடுத்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் சில வாரங்கள் கழித்து, விருந்து முடிந்து, சிவகுமார், மாதேஸ்வரி தம்பதி மீண்டும் தங்களது சொந்த ஊரான ஆந்திராவிற்கு சென்று விட்டனர். இந்த நிலையில் மாதேஸ்வரியை தொடர்பு கொண்ட கார்த்திக்கேயன் தான் அழைத்த போது எல்லாம் வந்து தனது இச்சையை தீர்க்க வேண்டும். இல்லையென்றால் இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று மிரட்ட தொடங்கினார்.

இதனால் செய்வதறியாது தவித்த மாதேஸ்வரி, இதுகுறித்து தனது கணவர் சிவகுமாரிடம் தெரியப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், மனைவி மாதேஸ்வரி மூலம் கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். அதன்படி மாதேஸ்வரி மூலம் போன் செய்து கார்த்திகேயனை, ஆந்திராவிற்கு வரவழைத்தனர். அவ்வாறு வந்த கார்த்திக்கேயனை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உருட்டு கட்டையால் அடித்து கொலை செய்தனர். அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டதும், இருவரும் சேர்ந்து உடலை அருகில் உள்ள காலி நிலத்தில் புதைத்தனர்.  பின்னர் எதுவும் தெரியாதது போல் தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு கூறினர். இந்நிலையில், சங்கர் நகர் போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் கொலை செய்து புதைத்த கார்த்திக்கேயன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இக்கொலை சம்பவம் பம்மல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : electrician ,Andhra Pradesh ,Anakaputhur ,
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி