×

சம்பா, தாளடி நெற்பயிரை தாக்கும் நெற்பழ நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை

நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் நெற்பழ நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நெற்பயிர் பூக்கும் தருணத்திலும் கதிர் வரும் நேரத்திலும் நெற்பழ நோய் தாக்குதல் மிகவும் அதிகமாக காணப்படும். பூக்கும் தருணம் மற்றும் கதிர் வெளிவரும் நேரத்தில் மழை பெய்வதும், அப்போது நிலவும் மந்தமான சீதோஷ்ண நிலையும் இந்நோய் தீவிரமடைவதற்கு காரணமாக அமைகின்றன. இந்நோய் பாதிப்புக்குள்ளான விதைகள், காற்று, மண், நீர் மூலமாக பரவுகிறது. இந்நோய் அதன் பூஞ்சான வித்துகளால் ஒரு வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு பரவும்.
நெற்கதிரின் மணிகள் பூஞ்சானத்தின் வித்துகளால் நிரம்பி பளபளப்பான பந்து போன்று காட்சியளிக்கும். இந்த பூஞ்சான பந்தானது முதலில் ஆரஞ்சு நிறமாகவும், பிறகு மஞ்சளும், பச்சை நிறமும் அல்லது பச்சையும் கருப்பு நிறமுமாக மாறி காணப்படும்.

முதலில் ஒரு கதிரில் உள்ள ஒரு சில மணிகளே இந்நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். அதிக தாக்குதல் இருக்கும்போது கதிரில் உள்ள அனைத்து மணிகளுமே பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் நெல்மணிகளின் தரம் குறைந்துவிடும். இந்நோய் பாதிப்பால் நெல் விதைகளில் மலட்டு தன்மை உண்டாகிறது. இந்நோய் தாக்காத விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விதைகளை சூடோமோனாஸ் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயல் மற்றும் வயலை சுற்றி களை செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மிகுதியான அளவில் தழைச்சத்து உரமிடுதலை தவிர்க்க வேண்டும். இந்நோயானது காற்றின் மூலம் பரவுவதால் தாக்கப்பட்ட கதிர்களை வயலில் இருந்து அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். குளிர்காலங்களில் நோய் தாக்குதலை முறையாக கண்காணிக்க வேண்டும். நெற்பழ நோயிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க சூல்கட்டும் பருவமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு ஹெக்சகொனசோல் 200 மிலி அல்லது குளோரோதலோனில் 400 கிராம் என்ற மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். கலப்பு கதிர் வெளிவரும் மற்றும் பால்பிடிக்கும் தருணமாக இருப்பின் ஒரு ஏக்கருக்கு புரோபிகொனசோல் 200 மிலி அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருப்பின் 15 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு வேளாண்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Samba ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை