தென்காசி, ஜன. 3: தென்காசி வஉசி நினைவு வட்டார நூலகத்தில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு சதுரங்க போட்டிகள் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை வகித்தார். வட்டார நூலகர் பிரமநாயகம் வரவேற்றார். ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பரமேஸ்வரன், கல்விதொலைக்காட்சி சார்லஸ், கவிஞர் குழந்தைஜேசு, பைன்ஆர்ட்ஸ் அகாடமி தட்சிணாமூர்த்தி வாழ்த்தி பேசினர். போட்டியில் தென்காசி பகுதிகளை சேர்ந்த 20 பள்ளிகளில் இருந்து 67 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 5ம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 6 முதல் 8 வரை மற்றொரு பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. 5ம் வகுப்பு வரை உள்ள பிரிவில், நேஷனல் பப்ளிக் பள்ளி சஞ்சீவ்பாலா முதல் பரிசும், அன்னை வேளாங்கண்ணி பள்ளி மலரிதழ் இரண்டாம் பரிசும், எஸ்எம்ஏ மெட்ரிக். பள்ளி வித்யோஸ் 3ம் பரிசும் பெற்றனர்.
6 முதல் 8ம் வகுப்பு வரையுள்ள பிரிவில் எஸ்எம்ஏ மெட்ரிக். பள்ளி விஜேஷ் முதல் பரிசும், ஹில்டன் பள்ளி கார்த்திக்ராகுல் இரண்டாம் பரிசும், வீரமாமுனிவர் மேல்நிலைப்பள்ளி சுபாஷ் மூன்றாம் பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நூலகர்கள் ஜூலியா, நிஷா, ராஜேஸ்வரி, வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகேசன், சலீம் ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் சுந்தர் நன்றி கூறினார்.