கடையநல்லூர், ஜன. 3: கடையநல்லூர் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதியில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க புதிய சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்மென அப்பகுதி மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையநல்லூர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வங்கிகள், வணிக வளாகங்கள், பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியூர்களுக்கு பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் சுகாதார வளாகம் இல்லாதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சுகாதார வளாகம் இல்லாதால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றும் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இந்த பகுதி நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் கழிப்பறை அமைப்பதில் சில நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.