கோவில்பட்டி, ஜன. 3: கயத்தாறு ஊராட்சி ஒன்றிய வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுக மற்றும் அமமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வெளியே அனுப்பினர். கயத்தாறு ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கலைக்கல்லூரி மையத்தில் நேற்று எண்ணப்பட்டன. இதில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 5 சுற்றுகள் முடிவடைந்து 11 ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.6-வது சுற்றுக்கான 12, 13-வது வார்டுகளில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக, அந்த வார்டுகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணும் அறைக்குள் அழைக்கப்பட்டனர். அப்போது 12-வது வார்டு அமமுக வேட்பாளர் கே.அருணாசலத்துடன், முகவர்கள் சென்றனர். இதில், முகவராக சென்ற சக்திவேல்முருகன் என்பவரை, இந்த வார்டில் உங்களுக்கு வாக்கு கிடையாது. நீங்கள் எப்படி முகவராக வர முடியும் என கேட்டு, அதிமுகவினர் தகராறு செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்து காவல் ஆய்வாளர்கள் சுதேசன், முத்துலட்சுமி, பத்மாவதி மற்றும் போலீஸார் அங்கு வந்து, வேட்பாளருடன் 4 முகவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என கூறி, கூடுதலாக அங்கிருந்தவர்கள் வெளியே அனுப்பினர். ஆனால், அதிமுகவினர் ஆட்சேபனை தெரிவித்ததால், 12-வது வார்டு அமமுக வேட்பாளரின் முகவர் சக்திவேல்முருகன் அங்கிருந்து வெளியே சென்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடந்தது.