சேலம், ஜன.3: உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையையொட்டி, ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 90 சதவீதம் சரிந்தது. படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர் விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. இதையொட்டி ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை 90 சதவீதம் சரிந்தது. இதனால், எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும் படகு இல்லம், மான் பூங்கா வெறிச்சோடி காணப்பட்டது. படகு இல்லத்தில் 75 சதவீத படகுகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்காட்டில் 500க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதில் நேற்று பாதி கடைகளுக்கு மேல் இயங்கவில்லை. இதனால் ஏற்காடு நேற்று களையிழந்து காணப்பட்டது.