×

கருங்கல் அருகே நடந்த தொழிலாளி கொலையில் பெண், 2 மகன்களுக்கு தொடர்பா? தனிப்படை அதிரடி விசாரணை

கருங்கல், ஜன. 3: கருங்கல் அருகே கட்டிட தொழிலாளி அலெக்சாண்டர் கொலை தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஒரு பெண் மற்றும் அவரது மகன்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கருங்கல் அருகே சகாயநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (48). வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் கடந்த 5 மாதத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பைக்கில், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஜெயாவுடன் வெளியே சென்றார். பின்னர் இரவு அவரை வீட்டில் விட்டு விட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டார். இந்த நிலையில் புங்கைகுளம்கரை பகுதியில் வைத்து ஒரு கும்பல், அலெக்சாண்டர் மீது மிளகாய்பொடி தூவியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை தேடும் பணியில் 2 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே படுகொலையை கூலிபடையினரை ஏவி அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொலை தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இந்த நிலையில் தனிப்படை ேபாலீசார், அலெக்சாண்டருடன் பைக்கில் சென்ற அவரது நண்பர் ஜெயாவை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரை விடுவித்து விட்டனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த அன்று முதல் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண் மாயமாகியுள்ளார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அப்பெண்ணின் 2 மகன்களும் மாயமாகிவிட்டனர். இது போலீசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரை தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முடிவில் கொலை வழக்கில் அந்த பெண்ணுக்கு தொடர்பு உண்டா என்பது குறித்து தெரிய வரும். அலெக்சாண்டர் கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags : sons ,murder ,Karangal ,Individual Action Investigation ,
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...