நாகர்கோவில், ஜன. 3: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மற்றும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் வீடுகளின் முன்பு குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்ப்பு கோலம்போட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி எதிர்ப்பு கோலங்கள் போடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பாஜ மற்றும் இந்து அமைப்பினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் கோலம் போடும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நேற்று வடசேரி பயோனியர் தெருவில் குமரி மாவட்ட பாஜ சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வீடு முன்பு கோலம் போட்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவி மீனாதேவ், மாவட்ட துணைத்தலைவர் முத்துராமன், மாவட்ட பார்வையாளர் தேவ், மாநில மகளிர் அணி பார்வையாளர் உமாரதிராஜன், வடக்கு மண்டல தலைவர் அஜித்குமார் நிர்வாகிகள் சுனில் அரசு, ராணி, உஷா, வேணுகிருஷ்ணன், சதீஷ் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.