சென்னை, ஜன. 3: சென்னைசூளை பகுதியில் வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (22). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் சூளை பகுதி சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் ஆனந்தை வழிமறித்து அவரது செல்போனை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, பெரியமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வியாசர்பாடி கன்னிகாபுரம் முதல் சந்து பகுதியை ேசர்ந்த சந்துரு மற்றும் ஆகாஷ் என்பது தெரிந்தது. இதில், சந்துரு தியாகராயர் கல்லூரியில் பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருவதும், ஆகாஷ் லோடு மேனாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.