சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மெரினா கடற்கரையில் இரவு 10 மணி முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமரா, உயர் கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆங்கிலப்புத்தாண்டை வரவேற்கும் வகையில் நேற்று இரவு மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே காவல்துறை சார்பில் அலங்கார விளக்குகளும், தோரணமும் அமைக்கப்பட்டிருந்தது.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, காவலன் காப்பு என்ற ஒன்றை குழந்தைகளின் கைகளில் போலீசார் கட்டினர். தொடர்ந்து இரவு 12 மணிக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றார். அப்போது, அங்கே திரண்டிருந்த பொதுமக்கள் வானவேடிக்கையுடன் ஆர்ப்பரித்து புத்தாண்டை வரவேற்று கோஷம் எழுப்பினர்.