தண்டையார்பேட்டை: ஸ்வீட் கடைக்காரரை மிரட்டி மாமூல் வசூலித்த மாஜி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். சென்னை மின்ட் தெரு தாதா முத்தையப்பன் தெரு சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு ஸ்வீட் கடையில் நேற்று முன்தினம் இரவு ஒரு நபர், தன்னை போலீஸ் எனக்கூறி மாமுல் கேட்டுள்ளார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த கடைக்காரர், இதுகுறித்து கொத்தவால்சாவடி காவல் நிலையத்திற்கு ரகசியமாக தகவல் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கொடுங்கையூர் எம்ஆர் நகர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த செல்வராஜன் (58) என்பதும், இவர் கடந்த 1986ம் ஆண்டு ஆயுதப்படை போலீசாக பணியில் சேர்ந்து, பின்னர் 1994ம் ஆண்டு குற்றபிரிவில் பணியாற்றியபோது நீண்ட விடுப்பில் சென்றார். அதன் பின்னர் பணிக்கு வரவில்லை. இதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்த செல்வராஜன், ஸ்வீட் கடையில் மாமூல் வசூலிக்க முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், இதுபோல் வேறு எங்காவது மாமூல் வசூலித்துள்ளாரா என தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருடைய தந்தை கடந்த 1992ம் ஆண்டு காசிமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.