×

பனிக்கால நோய்களில் இருந்து செம்மறி ஆடுகளை காப்பது எப்படி? அரவக்குறிச்சி கால்நடை பராமரிப்பு துறையினர் ஆலோசனை

அரவக்குறிச்சி, டிச. 31: பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளுக்கு பல் வேறு நோய்கள் ஏற்படும். இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும். இதிலிருந்து பாதுகாக்க செம்மறி ஆட்டு பட்டி பராமரிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு கால் நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். அரவக்குறிச்சி பகுதியில் விவசாயம் மட்டுமல்லாமல் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து ஜீவனம் நடத்தி வருகின்றனர். தற்போது அரவக்குறிச்சி பகுதியில் மழையை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கியுள்ளது. தற்போது பனி ஆரம்ப காலத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் செம்மறி ஆடுகளுக்கு பல் வேறு நோய்கள் ஏற்படுகின்றது. இதனால் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. பனிக்கால நோய்களிலிருந்து ஆடுகளை பாதுப்பது மற்றும் பராமரிப்பது எவ்வாறு என்பது பற்றி கால் நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது: தற்போது பனிக்காலம் ஆரம்மாகியுள்ளது. பனி அதிகமான காலங்களில் செம்மறி ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆட்டுப் பட்டி பராமரிப்பு மிக முக்கியாகும். பட்டி சரியாக அமைக்காவிட்டால் சளி, இருமல், வாய்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்.

இவற்றை தடுக்க ஆடுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டி தரம்புகள் விசாலமாக அமைக்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு ஆட்டுக்கு 4 சதுர அடி இடைவெளி விட வேண்டும். பட்டிக்கு மூன்றில் ஒரு பங்கு அளவு மட்டும் சாக்கு படுதா போடுதல் போதுமானது. காலையில் பட்டிக்குள் இளம் வெயில் விழும்படி கிழக்குப் பகுதியில் வெற்றிடம் விட வேண்டும். தென்னந் தோப்பு, மாந்தோப்பு போன்ற ஈரப்பதமான இடங்களில் பட்டி அமைக்கக் கூடாது. மேடான இடத்தில் பட்டி அமைக்க வேண்டும். தினமும் பட்டியை சுத்தப்படுத்துதல் வேண்டும். பட்டி தரம்புகளின் சுற்றுப்பகுதி, சாலை மற்றும் பெரிய ஆடுகளின் மீது கால்நடை மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிப்பது நல்லது. இதனால் வாய்புண் நோயை பரப்பும் பூச்சிக்கடி மற்றும் புற உண்ணிகளை தவிர்க்கலாம். மாலையில் வேம்பு, யூக்கலிப்டஸ், தும்பை மற்றும் இலை சருகுகள் கொண்டு பட்டிக்கு புகை போடலாம். இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாத்து நஷ்டத்தை தவிர்த்து கொள்ளலாம் என்று கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : winter diseases Consultation ,Aravakurichi Veterinary Care Department ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு