×

பஸ்ஸ்டாண்ட் வருமா நடமாடும் கழிவறை? திறந்தவெளியில் ஒதுங்கும் பயணிகள்

சிவகாசி, டிச. 31: சிவகாசி  பஸ்நிலைய விரிவாக்க பணிக்காக பொது கழிப்பறை இடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.   கட்டண கழிப்பறையில்  சிறுநீர் கழிக்க பயணிகளிடம்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே நகராட்சிக்கு சொந்தமான நடமாடும் கழிப்பறையை பஸ்நிலையத்தில் பயன்படுத்த பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பழை  பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில்  பஸ்நிலையம் அருகே உள்ள 1.5 ஏக்கர் நிலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டி விரிவுபடுத்தும் பணி  துவங்கியது. தற்போதுள்ள புதிய பஸ் நிலையத்தில்  14 கடைகள், புதிய பேருந்து நிறுத்தம், நவீன கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  புதிய வணிக வளாகம், வாறுகால், தரைதளம் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில்  கடந்த பல மாதங்களாக புதிய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் முடங்கி கிடக்கிறது.

பஸ் நிலைய  விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த 26  பழைய கடைகள், பொது சிறுநீர் கழிப்பறை  அகற்றப்பட்டது.  பஸ்நிலையத்தில் இருந்த பொது கழிப்பறை இடிக்கப்பட்டு அகற்றப்பட்டதால் பயணிகள் கட்டணம் கொடுத்து கழிப்பறை செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி பஸ்நிலையத்தில் உள்ள கட்டண கழிப்பறையில் பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.  இதனால் இரவு நேரங்களில் பயணிகள் திறந்தவெளி கழிப்பிடம் செல்கின்றனர். இதனால் பஸ்நிலையத்தில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. சிவகாசி நகராட்சிக்கு ரோட்டரி சங்கம் சார்பில் புதிய நடமாடும் கழிப்பறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கழிப்பறையை காலை, மாலை நேரங்கிளில் பஸ்நிலையத்தில்  பயணிகள் நலன் கருதி இலவசமாக பயன்படுத்த  கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய பஸ் நிலையத்தின் வணிக வளாகத்தில் சமூக விரோதிகள் தங்கி வருகின்றனர். இரவு நேரங்களில் சிலர் சமூக விரோத  செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே புதிய பஸ்நிலைய விரிவாக்க பணிகளை முழுமையாக  விரைந்து முடிக்கவும் நடமாடும் கழிப்பறையை பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கவும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : passengers ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...