×

காளையார்கோவில்-சிவகங்கை பஸ்களில் நெரிசலில் சிக்கி திணறும் பயணிகள்

சிவகங்கை, டிச.31: காளையார்கோவிலிலிருந்து சிவகங்கைக்கு முக்கியமான நேரங்களில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதியடைய வேண்டியுள்ளது. காளையார்கோவில் ஒன்றியத்தில் 350க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சுமார் 300 கிராம மக்கள் காளையார்கோவில் வந்து அதன்பிறகே மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். மதுரை-தொண்டி மெயின் ரோட்டில் உள்ள காளையார்கோவில், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காலை நேரத்தில் சிவகங்கை செல்கின்றனர். ஆனால் போதிய டவுன் பஸ் இல்லாததால் கடுமையான கூட்ட நெரிசலில் சிரமப்பட வேண்டியுள்ளது. மேலும் தொலை தூர பஸ்களிலும் அதிகமான கூட்டம் காணப்படுகிறது. தற்போது காலை 7.30 மணியிலிருந்து 9 மணி வரை இரண்டு டவுன் பஸ்கள் மட்டுமே காளையார்கோவில் வழி செல்கிறது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இந்த பஸ்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவதால் இரண்டு பஸ்களிலும் அதிகப்படியான கூட்டம் காணப்படுகிறது.

இதேபோல் மாலை நேரத்தில் சிவகங்கையிலிருந்து காளையார்கோவில் வழி செல்லும் பஸ்களும் குறைவாகவே இயக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:காலை. மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அதிகமான கூட்டம் டவுன் பஸ்களில் காணப்படுகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரத்தில் காளையார்கோவில் சிவகங்கைக்கு பல்வேறு கிராமங்கள் வழியே செல்லும் டவுன் பஸ்களை இயக்க வேண்டும். மேலும் இதே நேரத்தில் தொலை தூர பஸ்களும் கூடுதலாக இயக்க வேண்டும் என்றார்.

Tags : Kaliyarikovil-Sivaganga ,
× RELATED காளையார்கோவில்-சிவகங்கை பஸ்களில் நெரிசலில் சிக்கி திணறும் பயணிகள்