×

நினைவு நாள் நிகழ்ச்சியில் வலியுறுத்தல்

தஞ்சை, டிச. 31: கோவை வேளாண் பல்கலைக்கழகத்துக்கு நம்மாழ்வார் பெயர் சூட்ட வேண்டுமென தஞ்சையில் நடந்த 6ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. தஞ்சையில் அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 6ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அய்னாவரம் முருகேசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து அஞ்சலி செலுத்தி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது, மக்களிடம் இயற்கை வேளாண்மை மீதும் ரசாயன உரமற்ற நஞ்சில்லா இயற்கை உணவு நோக்கியும் மிகுந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. திருமணங்களில் மரக்கன்றுகள் வழங்குவது, மக்கள் தாமாக முன்வந்து கூட்டாக மரக்கன்றுகள் நடுவது என்பது அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இதற்கு அடித்தளமிட்ட பெருமை நம்மாழ்வாரைச் சேரும் என்றார். நிகழ்ச்சியில் கோவை வேளாண் பல்கலை கழகத்திற்கு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பெயர் வைக்க வேண்டும். இயற்கை வழி மற்றும் மரபு சார்ந்த விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட நம்மாழ்வாரின வழிகாட்டுதல்களை தொகுத்து மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிருஷ்ணன், தமிழ் தேசிய பேரியக்க தலைமைக்குழு உறுப்பினர் பழ.ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட செயலாளர் தில்லைவனம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன் நன்றி கூறினார்.

Tags : Memorial Day ,event ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...