×

சீனியர், சப் ஜூனியர் கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு வடுவூரில் 5ம் தேதி நடக்கிறது

மன்னார்குடி, டிச. 31: திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் ராஜ ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு மாநில 31வது சப் ஜூனியர் சிறுவர்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழக விளையாட்டரங்கில் ஜனவரி 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. அது போல் தமிழ்நாடு மாநில 67வது சீனியர் ஆண்கள் கபடி சாம்பியன் பட்ட போட்டிகள் கரூர் மாவட்டம் புகளூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜனவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட சாம்பியன் பட்ட போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ள திருவாரூர் மாவட்ட அணிக்கான வீரர்களை தேர்வு செய்யும் போட்டிகள் வரும் 5ம் தேதி காலை 9 மணி முதல் வடுவூர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த தேர்வு போட்டிகளில் சப் ஜூனியர் பிரிவில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு 29.02.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவராக 16 வயதிற்குள் இருக்க வேண்டும். 55 கிலோ அல்லது அதற்கு கீழ் இருத்தல் வேண்டும். மேலும் சீனியர் பிரிவில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு வயது வரம்பு தேவை இல்லை. 85 கிலோ அல்லது அதற்கு கீழ் இருத்தல் வேண்டும். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க படுவார்கள் முக்கியமாக மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வீரர்களுக்கு பங்கேற்க அனுமதியில்லை. மேலும் சப் ஜூனியர் பிரிவு அணிக்கு தேர்வு போட்டிகளுக்கு வரும் வீரர்கள் தங்களின் வயது மற்றும் இருப்பிட ஆதாரத்திற்கான சான்றின் நகல் அவசியம் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் ராஜ ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Tags : selection ,Senior and Sub Junior Kabaddi Tournament ,Vadduvar ,
× RELATED பேராசிரியர் பாலசுப்ரமணியன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்