×

திருவெறும்பூர் அருகே சாலையை கடக்க முயன்ற தொழிலாளி வாகனம் மோதி பலி


திருவெறும்பூர், டிச.31: திருவெறும்பூர் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி பலியானார். திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி தெற்குமலை முத்துராமலிங்க தேவர் சாலையை சேர்ந்தவர் முத்தையா (60). இவர் துவாக்குடி அருகே உள்ள தேவராயநேரி நரிக்குறவர் காலனியில் உள்ள காளிகோவில் பகுதியில் தங்கி நாடா மற்றும் சேர் ஒயர் பின்னும் தொழிலும் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை துவாக்குடி அருகே திருச்சி-தஞ்சையை தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முத்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து முத்தையா மீது மோதி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.

Tags : Thiruverumbur ,
× RELATED திருவெறும்பூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்