நெல்லிக்குப்பம், டிச. 31: நெல்லிக்குப்பம் அருகே பி.என் பாளையம் ஊராட்சி வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லிக்குப்பம் அருகே அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பி.என் பாளையம் ஊராட்சியில் நேற்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கு பதிவுகள் அமைதியான முறையில் நடந்தது. பின்னர் 4 மணிக்கு அந்த வாக்குச்சாவடிக்கு பெண் வாக்காளர் ஒருவர் வாக்கு பதிவு செய்ய வந்தார். அவருக்கு கண் பார்வை சற்று குறைவாக இருந்ததால் அருகில் தேர்தல் பணியில் இருந்த அலுவலர் ஜோதி என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அலுவலர் ஜோதி வாக்களிக்கும் இடத்துக்கு அருகில் சென்று வாக்காளரின் சந்தேகத்தை சரி செய்யும் விதமாக வாக்கு சீட்டின் சின்னம் மற்றும் எப்படி மடிப்பது என்று கூறியுள்ளார். இதனை அறிந்த பூத் ஏஜெண்டுகள் வாக்காளர்கள் வாக்களிக்கும் இடத்துக்கு எப்படி அலுவலர்கள் சென்று சின்னத்தை தெரியப்படுத்தலாம் என கேள்வி எழுப்பினார்கள்.
வாக்காளர் கேட்டுக் கொண்டதன்பேரில் தான் அருகில் சென்று சொல்லிக் கொடுத்தேன் என அலுவலர் ஜோதி கூறினார். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாக்குச்சாவடியில் எவ்வித பிரச்னையும் ஏற்படாத வண்ணம் இருக்க அந்த இடத்தில் பணியில் இருந்த ஜோதிக்கு பதில் சவுந்தராஜன் என்பவரை மாற்று அலுவலராக நியமித்தனர். இச்சம்பவம் பி.என் பாளையம் ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.