×

பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக விவசாய நிலத்தில் புகுந்து 7 யானைகள் அட்டகாசம்: வாழை, தென்னை மரங்கள், தக்காளி செடிகள் நாசம்

பேரணாம்பட்டு, டிச. 31: பேரணாம்பட்டு பகுதியில் தொடர்ந்து 2வது நாளாக விவசாய நிலத்தில் புகுந்து 7 யானைகள் அட்டகாசம் ெசய்ததில், வாழை, தென்னை மரங்கள், தக்காளி செடிகள் நாசமானது.வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தில் நேற்று அதிகாலை 7 யானைகள் ஊருக்குள் புகுந்தது. அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. அதே கிராமத்தை சேர்ந்த வினோத்கண்ணா(35) என்பவர் ஒரு ஏக்கர் நிலபரப்பில் பயிரிடப்பட்டுள்ள 400 வாழைமரங்கள் மற்றும் 2 தென்னை மரங்களை சேதப்படுத்தியது.ரகுபதி(53) என்பவரது முக்கால் ஏக்கர் நிலபரப்பில் பயிரிட்டிருந்த தக்காளி செடிகள் மற்றும் மாட்டுத்தீவன பயிர்களை சேதப்படுத்தியது. வஜ்ரவேல்(35) என்பவருக்கு சொந்தமான 2 மாமரங்கள், தென்னை கன்றுகள் மற்றும் நிலத்திற்கு பாய்ச்ச பயன்படுத்தப்படும் பைப் லைன் ஆகியவைகளை சேதப்படுத்தியது. நந்தகோபால் என்பவருக்கு சொந்தமான 6 கல் கம்பங்கள் மற்றும் மாமரக்கிளைகளை சேதப்படுத்தியது.

இதுகுறித்து விவசாயிகள் பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வனசரகர் சங்கரய்யா, வனவர் அரி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், எம்எல்ஏ காத்தவராயன் விவசாய நிலத்தில் சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டார்.மேலும் இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வன அலுவலர் பார்கவ் தேஜா ஆகியோருக்கு போனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.பேரணாம்பட்டு அடுத்த மசிகம், மதினாப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் இந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி சென்றது. தொடர்ந்து 2வது நாளாக நேற்று எருக்கம்பட்டு கிராமத்தில் யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags : area ,Peranampattu ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...