குளத்தூர், டிச. 31: தூத்துக்குடி மாவட்ட 2ம் கட்ட ஊராட்சி தேர்தலையொட்டி குளத்தூர் வட்டாரத்தில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. குளத்தூர் மற்றும் சுற்று வட்டார ஊராட்சி கிராமங்களான வேப்பலோடை, வேடநத்தம், தருவைகுளம், புளியங்குளம், கீழவைப்பார், வைப்பார், த.சுப்பையாபுரம், வீரபாண்டியாபுரம், பூசனூர், மேல்மாந்தை, சூரங்குடி, வேம்பார் ஆகிய பகுதிகளில் ஊராட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. குளத்தூர் ஊராட்சியில் சுமார் 6,800 வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவையொட்டி டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளி, இந்து நாடார் நடுநிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் துவக்கப்பள்ளி, கெச்சிலாபுரம் துவக்கப்பள்ளி என மொத்தம் பத்து பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் காலை முதலே வாக்களிக்கத் துவங்கினர். கீழவைப்பார் ஊராட்சியில் 2690 வாக்காளர்கள் கீழவைப்பார், சிப்பிகுளம், ஸ்ரீவைகுண்டபெருமாள்புரம் பள்ளிகளில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். இதனிடேயே கீழவைப்பார் மீனவக் கிராமத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் காலையிலேயே கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் வாக்குப்பதிவு காலையில் மந்தமாக காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு மீனவர்கள் கரை திரும்பியதோடு வாக்குச்சாவடிகளுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்ததால் விறுவிறுப்பாக இருந்தது.
வைப்பார் ஊராட்சிக்கு உட்பட்ட 1,200 வாக்காளர்கள் இதையொட்டி வைப்பார், கலைஞானபுரம், துலுக்கன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அமைக்கப்பட்டிருந்த 3 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். வேடநத்தம் தனி ஊராட்சியில் 1276 வாக்காளர்கள் அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குகள் அளித்தனர். தருவைகுளம் ஊராட்சியில் 6200 வாக்காளர்கள் தருவைகுளம், அனந்தமடம்பச்சேரி, ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். வேப்பலோடை ஊராட்சியைச் சேர்ந்த 2,695 வாக்காளர்கள் துவக்கப்பள்ளி மற்றும் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். வேம்பார் வடக்கு மற்றும் தெற்கு ஊராட்சியில் 4500 வாக்காளர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் அமைக்கபட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் காலை முதல் மாலை வரை அமைதியாக தேர்தல் நடந்தது.