மஞ்சூர், டிச.30: மஞ்சூர் அருகே தேயிலை தோட்டத்தில் சுற்றி வரும் ஒற்றை காட்டுமாட்டால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மஞ்சூர் அருகே மெரிலேண்டு, மைனலாமட்டம், பெங்கால்மட்டம், கிட்டட்டிமட்டம், தேனாடு, கோத்திபென், சாம்ராஜ் எஸ்டேட் மற்றும் ராக்லேண்டு உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், பட்டாணி, அவரை, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பல வகையான மலை காய்கறிகளை பயிரிட்டு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்இந்த கிராமங்களை சுற்றிலும் தேயிலை தோட்டங்களுடன் அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக காட்டுமாடு அதிகளவில் நடமாடி வருகின்றன. இந்நிலையில் மெரிலேண்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டுமாடு சுற்றி வருகிறது. இதனால் தேயிலை தோட்டங்களுக்கு இலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் பெண் தொழிலாளர்கள் இருவர் தேயிலை பறித்து கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்குள் புகுந்த காட்டுமாடு திடீரென தொழிலாளர்களை விரட்ட துவங்கியது. இதை கண்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து தேயிலை தோட்டத்தில் இருந்து தலைதெறிக்க ஓடி தப்பினார்கள். இதையடுத்து மெரிலேண்டு பகுதியில் சுற்றி வரும் ஒற்றை காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.