திருப்பூர்,டிச.30:திருப்பூர்-அவிநாசி மெயின் ரோடு புஷ்பா பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் ஓட்டல் முன் உள்ள சாக்கடை கால்வாயில் மீதமாகும் உணவு மற்றும் கழிவுகளை கொட்டுவதால் சாக்கடையி–்ல் அடைப்பு ஏற்பட்டு சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது.திருப்பூர்-அவிநாசி மெயின் ரோடு புஷ்பா பஸ் நிறுத்தத்தில் கோவை, அவிநாசி, கோபி செல்லும் தொலைதுார பஸ்கள், டவுன் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றிச்செல்கிறது. பின்னலாடை நிறுவனங்களுக்கு செல்லும் ஊழியர்கள், கூலி வேலைக்கு செல்லும் விவசாய தொழிலாளர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ,மாணவிகள் என எப்போதும் பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான பஸ் நிறுத்தம் ஆகும்.
இதன் அருகே 10க்கும் மேற்பட்ட தனியார் ஓட்டல்கள் உள்ளன. ஓட்டலில் மீதமாகும் உணவு பொருட்கள், காய்கறி கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகளை சாக்கடை கால்வாயில் கொட்டுவதால் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. பல நாட்களாக அடைப்புகளை சரிசெய்யாததால் அப்பகுதியில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் அமைதி காப்பது பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சாக்கடைகளில் மீதமாகும் உணவு பொருட்கள், ஓட்டல் கழிவுகளை கொட்டும் உரிமையாளர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.