திருப்பூர்,டிச.30: திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் துணிகளுக்கு சாயமிடும் கட்டணங்களை 30 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் வழங்காத உற்பத்தியாளர்கள் குறித்து சங்க உறுப்பினர்கள் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டுமென பொதுச்செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகசாமி, தலைவர் நாகராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-திருப்பூரில் உள்ள சாய ஆலைகளுக்கு ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடிகளை கடந்து பல கோடி மதிப்பில் முதலீடு செய்து புதிய தொழில் நுட்பத்தில் பூஜிய நிலை சுத்தகரிப்பு நிலையத்தை அமைத்து சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது.
இந்தியாவிலிலேயே திருப்பூரில் மட்டுமே சாயக்கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பின்னலாடை உற்பத்தியாளர்களின் துணிகளுக்கு சாயமிட்டு கொடுக்கும் சங்க உறுப்பினர்கள் பில் கொடுத்த நாட்களிலிருந்து 30 நாட்களில் வசூலிக்கப்பட வேண்டும். 60 நாட்களுக்கு மேல் தவணை சொல்லும் பின்னலாடை நிறுவனங்கள் பற்றிய விபரங்களை உறுப்பினர்கள் சங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அந்நிறுவனங்கள் மீது சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க பொதுச்செயலாளர் முருகசாமி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. சங்க உறுப்பினர்கள் தொழிற்சாலைகளில் சாயமிட்டுக்கொடுத்த தொகையை 60 நாட்களுக்குள் கொடுக்காத பனியன் நிறுவனத்திற்கு சங்க உறுப்பினர்கள் யாரும் சாயமிட்டு கொடுக்கக் கூடாது என அனைத்து சாய ஆலைகளுக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள். சங்கத்தின் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத பனியன் உற்பத்தி நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழகம் முழுவதும் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்திற்கும் தெரியப்படுத்தப்படும். காலதாமதம் செய்யும் நிறுவனங்கள் பற்றிய விபரங்களை சங்க உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.