×

திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் கழிவுநீர் ஓடுவதால் சுகாதார சீர்கேடு: பாதசாரிகள் கடும் அவதி

ஆவடி, டிச. 30: ஆவடி திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் பாதாள சாக்கடை மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், பாதசாரிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சிடிஎச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக இந்த சாலை வழியாக ஆவடி பகுதியில் உள்ள ராணுவத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவுக்கழகம், ரயில்வே பணிமனை ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் தினமும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் நுழைவு வாயில் அருகில் முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக கழிவுநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். இதில், இருந்து கடந்த இரு மாதங்களாக கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதுடன் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளதால் கனரக வாகனங்கள் செல்லும்போது கழிவுநீர் சிதறி இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுகிறது. இதனால் பாதசாரிகளின் உடைகள் பாழாகிறது. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கழிவுநீரில் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் பலனில்லை என கூறப்படுகிறது.  எனவே மாநகராட்சி  அதிகாரிகள் கவனித்து முடங்கி கிடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீர் குழாய்களை இணைப்பதை தடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : CDH Road ,
× RELATED பட்டாபிராம் சிடிஎச் சாலையில் ரயில்வே...