×

திருநெல்வேலி-தென்காசி வழியாக சென்னைக்கு அந்தியோதயா ரயில் இயக்க வலியுறுத்தல்

சிவகாசி, டிச. 30: திருநெல்வேலியில் இருந்து தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அந்தியோதயா ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய ரயில்வே அமைச்சகம் செங்கோட்டை வழித்தடத்தில் பல புதிய ரயில்கள் இயக்க  அறிவிப்பை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.ஏழை, எளிய பயணிகள் பயன்பெறும் வகையில் அந்த்யோதயா ரயில்கள் செங்கோட்டை வழித்தடத்தில் இயக்க பயணிகள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். செங்கோட்டை வழித்தடத்தில் தற்போது பொதிகை விரைவு எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், தாம்பரம்-கொல்லம் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர்-செங்கோட்டை, விருதுநகர்- மானாமதுரை, திருநெல்வேலி - தென்காசி, பொள்ளாச்சி - கோயமுத்தூர் இந்த வழித்தடத்தில் பகல் நேரத்தில் குறைந்தளவு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதே போன்று ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு தென்காசி, விருதுநகர், மானாமதுரை வழியாக அந்தியோதயா ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் செங்கோட்டை டூ கோயமுத்தூருக்கு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி வழியாக சிறப்பு ரயில் இயக்க  வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில இருந்து தற்போது 3 தினங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி இயக்க அறிவிப்பு வெளியிட வேண்டும். வேளாங்கண்ணி- கொல்லம் வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை தினசரி இயக்கவும் இரவு 8 மணிக்கு மேல் மதுரையில் இருந்து கொல்லத்திற்கு பயணிகள் ரயில் இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் பொதிகை விரைவு ரயிலில் பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு தனி பொது பெட்டி வசதி செய்து தரப்படவில்லை. மேலும் பொதிகை ரயிலில் தற்போது 18 பெட்டிகள் மட்டுமே உள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் பயணிகள் சிரமப்படுகின்றனர். பொது பெட்டியில் கூட்டம் காரணமாக படியில் தொங்கியபடி பயணிகள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். பொதிகை விரைவு வண்டியில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகாரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Antioch Railway ,Chennai ,Tirunelveli ,Tenkasi ,
× RELATED ரூ.4 கோடி விவகாரம்: நயினார்...