உத்தமபாளையம், டிச.30: தேனிமாவட்டத்தில் இன்று நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் யாரையும் விரும்பாதவர்கள் என்ன செய்வது என்ற குழப்ப மனநிலையில் உள்ளனர்.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், தேனி, பெரியகுளம், கம்பம், போடி, சின்னமனூர் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடிய மாவட்ட, மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு இன்று (30ந்தேதி), வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் இறுதிகட்ட பிரசாரத்தை எட்டிவிட்டு இன்று தங்களது ஆதரவு வாக்குகளுக்காக காத்திருக்கின்றனர்.
இதனிடையே வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் நடக்கும் தேர்தல்களில் யாருக்கும் வாக்காளிக்க முடியாமல் உள்ளவர்கள் தங்களது விருப்பப்படி நோட்டா பொத்தானில் அழுத்தி விட்டு செல்வர். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் வாக்குசீட்டு முறை என்பதால் வாக்குசீட்டில் இதற்கான சிம்பல் எதுவும் இருக்காது. மாறாக இதற்காக உள்ள படிவத்தை பழைய நடைமுறையில் வாங்கி பூர்த்தி செய்து தருவதற்கான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் நோட்டாவில் ஓட்டுப்போட விரும்புபவர்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் உள்ளனர். நோட்டாவிற்கு இன்றைய தேர்தலில் டாட்டா காட்டிவிட்டதாக இதன் கிராமப்புற ஆதரவாளர்கள் புலம்பி வருகின்றனர்.