×

வாக்கு பெட்டிகள் வைத்துள்ள இடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 3 அடுக்கு பாதுகாப்பு

நாகை, டிச.30: நாகை மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக நிறைவு பெற்றது. இதில் 75.74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்தவுடன் தலைமை ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்குப்பதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்த இடங்களில் இருந்து வாகனங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை விடிய, விடிய எடுத்து வந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்தனர்.

நாகை ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் நாகை அமிர்தானந்தா பள்ளியிலும், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குபெட்டிகள் கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்கு பதிவு பெட்டிகள் சீர்காழி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியிலும், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்கு பதிவு பெட்டிகள் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியிலும், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் புத்தூர் பாலிடெக்னிக் மற்றும் சீனிவாசன் அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அறையின் முன்பு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறையை முழுமையாக கண்காணிக்க 8க்கும் அதிகமான கண்காணிப்பு கேமிராக்கள் ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் பொருத்தப்பட்டுள்ளது.

இதை தவிர நுழைவு வாயில் நடை பாதை என்று ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்தில் 15க்கும் அதிகமான கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் 1 டிஎஸ்பி தலைமையில் 1 இன்ஸ்பெக்டர் 3 சப்-இன்ஸ்பெக்டர் 20 போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் என்று 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நுழைவு வாயில், வாக்குபதிவு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை நுழைவு வாயில், வாக்கு பதிவு பெட்டி வைக்கப்பட்டுள்ள அறை என்று 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதை தவிர 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அதிரடியாக சோதனை செய்வதற்கு என்று ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 வாக்கு எண்ணிக்கை மையத்தில் 1500 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குபதிவு மையங்கள் மற்றும் வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டள்ள இடங்களில் கம்பியால் ஆன தடுப்பு கட்டைகள் கொண்டு கட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து செல்லும் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Tags : gunmen ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில்...