×

புத்தாண்டில் விருந்தினர்களுக்கு பரிசளிக்க தயாராகி வரும் தஞ்சை சந்தன மாலைகள்

தஞ்சை, டிச. 30: புத்தாண்டில் முக்கிய விருந்தினர்களுக்கு பரிசளிப்பதற்காக பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்லும் தஞ்சை சந்தன மாலை தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. 2020ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. வருடத்தின் முதல் நாள் என்பதால் அன்று பலரும் நண்பர்கள், உறவினர்களுக்கு பல்வேறு பொருட்களை நினைவு பரிசாக கொடுப்பர். கடந்த சில ஆண்டுகளாக வருடத்தின் முதல் நாளில் பெரும்பாலானோர் சந்தன மாலையை தான் தேர்ந்தெடுத்து அணிவித்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் வாடாமல் வதங்காமல், வாசத்தோடு இருப்பதால் இந்த சந்தன மாலையை பரிசாக அணிவிக்கும்போது ஒருவிதமான பாசப்பிணைப்பு ஏற்படுகிறது. மேலும் வீட்டின் அறையில் மாட்டி வைத்தால் அந்த அறை முழுவதும் வாசம் வீசுவதால் மன அமைதி, நிம்மதி ஏற்பட்டு துவங்கும் காரியங்கள் நல்ல முறையில் நடக்கிறது.இத்தகைய சிறப்பு பெற்ற சந்தன  மாலைகளை தஞ்சை அடுத்த தண்டாங்கோரை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் குடும்பத்தினர் தயாரித்து தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து சந்தன மாலைகள் தயாரித்து வரும் தண்டாங்கோரை செல்வராஜ் கூறுகையில், ராஜராஜ சோழன் காலத்தில் தான் நெல்மணிகளை கொண்டு முதலில் மாலைகள் தயாரிக்கப்பட்டது. இந்த மாலைகளை மன்னன், தான் எங்கு சென்றாலும் கையோடு எடுத்து செல்வது வழக்கம். தன்னை சந்திக்க வரும் விருந்தினர்களுக்கு நெல்மணி மாலைகளை பரிசாக வழங்கி வந்துள்ளார். காலப்போக்கில் நம் மண்ணுக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த நெல்மணி மாலையை பார்த்து வியந்தனர். நெல்மணிகளை கொண்டு மாலைகளை தயாரித்து வந்த தஞ்சாவூர் கைவினை தொழிலாளர்கள் பின்னர் மனமனக்கும் ஏலக்காய், சந்தனம் ஆகியவற்றை கொண்டு விதவிதமான மாலைகளை தொடுத்தனர். விலை குறைவாகவும், பார்க்க பளபளப்பாகவும் இருந்ததால் சந்தன மாலைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இன்று தஞ்சாவூரை சுற்றி 50க்கும் மேற்பட்டோர் சந்தன மாலையை தயாரித்து வந்தாலும் இந்த தொழிலில் மறைமுகமாக 10 ஆயிரம் பெண்கள் ஈடுபட்டு வருமானத்தை வீட்டிலிருந்தே பெருக்குகின்றனர். இந்த மாலைகள் தஞ்சாவூரில் மட்டுமே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் இதற்கு தஞ்சை சந்தன மாலை என பெயர் வந்தது. வெளிநாடு, வெளிமாநில, மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சந்தன மாலைகளை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தஞ்சாவூர் மாலைகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. சந்தன மாலைகள் இரண்டு சரத்தில் துவங்கி 20 சரம் வரை தொடுக்கப்படும். இந்த சந்தன மாலையின் விலை ரூ.100ல் இருந்து ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மூலப்பொருட்களின் விலை உயர்வால் 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது என்றார்.

Tags : Guests ,
× RELATED ராமர் கோயில் குடமுழுக்கு விழா; 2,200...