கும்பகோணம், டிச. 30: பூட்டி கிடக்கும் அரசு கட்டிடங்களை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் காப்பகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் முன்னாள் தலைவர் மனு அனுப்பியுள்ளார். தமிழக முதல்வருக்கு கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் முன்னாள் தலைவர் லோகசந்திர பிரபு கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தமிழகத்தில் தற்போது பெரும்பாலான அரசு பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் வருகையின்றி மூடப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி கூடங்களை நோக்கி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதே இதற்கு காரணம் என பலரும் கூறினாலும் இதை அரசு கருத்தில் கொண்டு பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.
மூடப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடங்களை நூலகங்களாக மாற்றி வருவதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய இன்டர்நெட், ஸ்மார்ட் டிவி, செல்போன் போன்ற பயன்பாடுகள் அதிகரிப்பால் புத்தக வாசிப்பு குறைந்து வருகிற வேளையில் அனைத்து நூல்களும் மின் இதழ்களாக மாறிவரும் சூழலில் நூலகத்தின் பயன்பாடு எதிர்கால சந்ததியினருக்கு தேவைப்படுமா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கையும் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் தெருவோரங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே அரசு கட்டிடங்கள் மற்றும் மூடி கிடக்கும் பள்ளி கட்டிடங்களை ஆதரவற்றோர்களுக்கான முதியோர் காப்பகங்களாக மாற்ற வேண்டும். இதனால் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு நல்ல உறைவிடம் அமைத்து கொடுப்பதற்கு வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.