கருங்கல், டிச. 30: கருங்கல் கட்டிட தொழிலாளி அலெக்சாண்டர் கொலை தொடர்பாக அவரது நண்பரை பிடித்து, நேற்று 2வது நாளாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.கருங்கல் அருகே சகாயநகர் பகுதியை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (48). வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்தார். விடுமுறையில் கடந்த 5 மாதத்திற்கு முன்புதான் ஊருக்கு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஜெயாவுடன் பைக்கில் வெளியே சென்றார். பின்னர் இரவு அவரை வீட்டில் விட்டு விட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டார். இந்த நிலையில் புங்கைகுளம்கரை பகுதியில் வைத்து ஒரு கும்பல், அலெக்சாண்டர் மீது மிளகாய்பொடி தூவியது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவரை கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளை தேடும் பணியில் 2 தனிப்படைகள் ஈடுபட்டுள்ளன. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. எனவே படுகொலையை கூலிபடையினரை ஏவி அரங்கேற்றி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொலை தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.இந்த நிலையில் தனிப்படை ேபாலீசார், அலெக்சாண்டருடன் பைக்கில் சென்ற அவரது நண்பர் ஜெயாவை பிடித்து விசாரணை நடத்தினர். இவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உண்டா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை 2வது நாளாக நேற்றும் தொடர்ந்து நடந்தது. அதே போல் படுகொலை செய்யப்பட்ட அலெக்சாண்டரின் செல்போனுக்கு வந்த கால்கள் குறித்தும் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.