உடுமலை,டிச.29:உடுமலை,டிச.29: திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் (27ம் தேதி) நடந்து முடிந்தது. மேலும் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பணியாற்றவுள்ள சுமார் 2700 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் வரை தபால் ஓட்டுக்கள் வரவில்லை. இது குறித்த செய்தி தினகரன் நாளிதழில் வெளியானது.
இதனையடுத்து நேற்று உடுமலை ஒன்றிய அலுவலகத்தில் தபால் ஓட்டுக்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை முதலே ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்றிய அலுவலகத்தில் குவிந்தனர்.
ஆனால் நீண்ட நேரம் வரை அவர்களுக்கு தபால் ஓட்டுக்கள் வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.ஏற்கனவே விடுமுறைக்காலங்களில் கூடுதல் பணிச்சுமையால் மன அழுத்தத்துக்குள்ளாகியுள்ள நிலையில் பசியுடன் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். மணிக்கணக்கில் காத்திருந்து, காத்திருந்து பல மணி நேரம் வீணடிக்கப்பட்டது. தாங்கள் பலவிதங்களில் அலைக்கழிக்கப்பட்டது தாங்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கையே இது என பலரும் தங்கள் மனக்குமுறலைப் பதிவு செய்தனர்.