கோவில்பட்டி, டிச. 29: கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் தேர்வான மாணவர்கள் 340 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல், ஆட்டோமொபைல், டூல் மற்றும் டை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடந்தது. சென்னை டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த வளாக நேர்முககாணலை நிறுவனத்தின் மனித வளத்துறை பொதுமேலாளர் ரங்கநாதன் தலைமையில் துணை மேலாளர்கள் தர், கிருஷ்ணமூர்த்தி, கோபிநாத் முன்னிலையில் பணியாளர்கள் துறை அலுவலர்கள் பாலாஜி, மாதவன், பார்த்தசாரதி இடம்பெற்ற குழுவினர் நடத்தினர்.
இதில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து மொத்தம் 607 மாணவர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முதலாவதாக நடந்த எழுத்துத் தேர்வில் தேர்வான 393 மாணவர்களுக்கு நேர்காணல் நடந்தது. இதில் வெற்றிபெற்ற கோவில்பட்டி லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 45 பேர் உள்ளிட்ட மொத்தம் மாணவர்கள் 340 பேருக்கு பணி நியமன ஆணையை சென்னை டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தினர் வழங்கினர்.ஏற்பாடுகளை கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாசலம் ஆலோசனையின் பேரில் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் ராஜாமணி மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.