×

விமானநிலைய ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் நகை, பணம் கொள்ளை

கோவில்பட்டி, டிச. 29:  கோவில்பட்டி அருகே ஓய்வுபெற்ற விமான நிலைய ஊழியர் உள்பட 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
 தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அடுத்த கிருஷ்ணாநகர் மன்னார் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் கணபதி (68). ஓய்வுபெற்ற விமானநிலைய ஊழியரான இவர், கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு பதறினார். மேலும் பிரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.7,500 ஆகியன மர்ம நபர்களால் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதேபோல் இதே பகுதியில் 3வது தெருவில் வசித்து வருபவரும் அரசு விரைவு பஸ்சில்  பணியாற்றி ஓய்வுபெற்றவருமான குருசாமி (63), சென்னை சென்று விட்டு நேற்று காலை  வீடு திரும்பினார்.
இதில் வீட்டின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், உள்ளே பீரோவில் இருந்த 1.5 பவுன் தங்க மோதிரம், 4 கிலோ எடையிலான வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
 இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் கணபதி, குருசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Tags : robbery ,homes ,house ,airport employee ,
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...