×

பாக்குடி, பேராம்பூர், கோங்குடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நாளை மறுவாக்கு பதிவு

புதுக்கோட்டை, டிச.29: பாக்குடி, பேராம்பூர் மற்றும் கோங்குடிப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 15க்கான உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் வே.சேகர் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்திற்கு பதிலாக அந்த வார்டுக்கான வாக்குச்சீட்டில் வேறுசின்னம் அச்சிடப்பட்டதால், 27.12.2019 அன்று நடைபெற்ற வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி நாளை (30ம் தேதி) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மறு வாக்குப்பதிவு விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு எண் 15 ல் இடம் பெற்றுள்ள பாக்குடி, பேராம்பூர் மற்றும் கோங்குடிப்பட்டி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளில் அடங்கியுள்ள வாக்குச் சாவடி எண் 107(அ.வா.), 108(அ.வா.), 109(அ.வா.), 110(அ.வா.), 111(அ.வா.), 160(அ.வா.), 161(அ.வா.), 162(அ.வா.), 163(அ.வா.), 164(அ.வா.), 165(அ.வா.), 166(அ.வா.) மற்றும் 167(அ.வா.) ஆகிய 13 வாக்குச்சாவடிகளில் மட்டும் நடைபெறும். மறு வாக்குப்பதிவின் போது ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மட்டுமே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வாக்குப்பதிவுகள் நடைபெறும்.

27.12.2019 அன்று இந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவின் போது பதிவான ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள் மட்டும் வாக்குகள் பிரித்தெடுக்கும் அறையிலேயே தனியாக பிரித்து அவை எண்ணப்படாமல் மூடி முத்திரையிட்டு பாதுகாக்கப்படும். நாளை (30ம் தேதி) நடைபெறவுள்ள மறுவாக்குப்பதிவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pakistani ,Perambur ,Kongudipatti Panchayat Ward ,
× RELATED சம்பளம் கேட்ட ஊழியருக்கு அடி: உரிமையாளர் உள்பட 2 பேர் கைது