புதுச்சேரி, : புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ஓட்டல், விடுதி உரிமையாளர்களுடன் சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளில் ஓட்டல்கள், விடுதி நிர்வாகங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றன. இதற்கு சிறப்பு அனுமதி பெற வேண்டுமென நகராட்சி எச்சரித்துள்ளது. இதனிடையே புதுச்சேரி மாவட்டத்தில் கொண்டாடும் புத்தாண்டையொட்டி ஓட்டல் உரிமையாளர்களுடன் காவல்துறை சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் தலைமை தாங்கினார். எஸ்பிக்கள் முருகவேல், மாறன், சுபம் கோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜெயராமன், ஜெயசங்கர், சண்முகம், வெற்றிவேல் மற்றும் எஸ்ஐக்கள், நகர பகுதியில் உள்ள ஓட்டல், விடுதிகளின் உரிமையாளர்கள் 130க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், பார்க்கிங் முறைகளை ஒழுங்குபடுத்தவும், வரம்பு மீறிய செயல்களை தடுக்கவும் ஓட்டல் நிர்வாகங்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீனியர் எஸ்பி ஆலோசனை வழங்கினார். அப்போது ஓட்டல் நிர்வாகங்கள் சார்பில் புதுவைக்கு சுற்றுலா வருபவர்கள் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். ஊருக்கு புதிதாக வருபவர்களுக்கு இங்குள்ள விதிகள் தெரியாது என்பதால் முதலில் அவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.