கிருஷ்ணகிரி, டிச.29: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி, இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி ஓசூர், காவேரிப்பட்டணம், மத்தூர், தளி, ஊத்தங்கரை ஆகிய ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (30ம்தேதி) பர்கூர், கெலமங்கலம், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, சூளகிரி ஆகிய ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது. இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக சென்றனர். இவர்களுக்கு பிரசாரம் செய்ய, அரசியல் கட்சிகளில் இருந்து தலைமை கழக பேச்சாளர்களும் வந்து, பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முழுவதும் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பரபரப்பாக காணப்பட்டது.