குமாரபாளையம், டிச.27: குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவ கல்லூரியின், 27வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் சிவக்குமார் வரவேற்றார். நடராஜா கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தாமரை குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார். நிர்வாக இயக்குனர் ஓம்சரவணா சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மொரீசியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் டாக்டர் பார்லென் பரமசிவம் வையாபுரி கலந்துகொண்டு பேசுகையில், ‘தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மொரீசியஸ் நாட்டில் குடியேறினார்கள். தமிழர்களின் பாரம்பரிய திருவிழா, விளையாட்டுகள் அனைத்தையும் மொரீசியஸ் மக்கள் மறவாமல் கொண்டாடி வருகின்றனர். நாடுகளை கடந்த தமிழர் கலாச்சாரங்கள், மரபுகளை நாம் போற்றி பாதுகாக்க வேண்டும்,’ என்றார். விழாவில் 90 இளநிலை மாணவர்களுக்கும், 7 முதுநிலை மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. பல் மருத்துவ கல்லூரி துணை முதல்வர் கருணாகரன் நன்றி கூறினார்.