திருத்துறைப்பூண்டி, டிச.27: திருத்துறைப்பூண்டி அருகே கோயில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சைக்கிளில் சென்ற முதியவர் பரிதாபமாக இறந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (70). இவர் நேற்று மாலை சைக்கிளில் சிவன்கோவில் தெற்கு பகுதி சுவர் ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சிவன் கோயில் சுற்றுசுவர் திடீரென இடிந்து மாரியப்பன் மீது விழுந்தது. இதில் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆலிவலம் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுவர் இடிந்து விழுந்து இறந்த மாரியப்பன் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.