×

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தூத்துக்குடி, டிச. 27:  தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என தூத்துக்குடி கலெக்டரிடம் திமுக எம்எல்ஏக்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சந்தீப் நந்தூரியிடம் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர்.  அதில் கூறியிருப்பதாவது: ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும் (27ம் தேதி) மற்றும் 30ம் தேதியும் நடக்கிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி ஜன.2ம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள், ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் வலுவான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.  வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமரா வைக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் உரிய அடையாள அட்டையுடன் கூடிய முகவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் தலைவருக்கான வாக்குகள் எண்ணி முடித்து, முடிவுகளை அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கி சம்மந்தப்பட்ட ஊராட்சி முகர்வர்கள் வெளியே சென்ற பிறகுதான் அடுத்த ஊராட்சியின் வாக்கு எண்ணும் பணி துவங்க வேண்டும்.

அதேபோல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான ஒரு வார்டு வாக்கு எண்ணும் முடிவை அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி சம்பந்தபட்டவர்களை வெளியே அனுப்பிய பிறகுதான் அடுத்த வார்டின் வாக்கு எண்ணும் பணியை துவங்க வேண்டும். இதே நடைமுறைதான் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும் பின்பற்ற வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவினை சரியான முறையில் அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனு அளிக்கும் நிகழ்ச்சியின்போது கீதாஜீவனுடன் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தேர்தல் பொறுப்பாளர் செங்கை சிவா, நிர்வாகிகள் உள்ளிட்டோரும், அனிதா ராதாகிருஷ்ணனுடன் சண்முகையா எம்எல்ஏ, தேர்தல் பொறுப்பாளர் கார்த்தி எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Geethajeevan ,Anita Radhakrishnan ,Collector ,Thoothukudi district ,Rural Local Elections ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி...