ஆரல்வாய்மொழி, நவ.27: தோவாளை ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் தோவாளையை சேர்ந்த சொக்கலிங்கம் (எ) சிவா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தோவாளை கிருஷ்ணன்புதூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் பொதுமக்களிடம் கூறியதாவது: தோவாளை ஊராட்சியினை மாநிலத்திலேயே முன்மாதிரியான ஊராட்சியாக மாற்றி காட்டுவேன். அதற்காக பல திட்டங்கள் வைத்துள்ளேன். குறிப்பாக தோவாளையில் புகழ்பெற்ற மலர்வணிக வளாகத்திலும், பூ கட்டும் தொழிலாளர்கள் மத்தியில் இருந்தும் தினமும் அதிகமான குப்பைகள் வருகின்றன. இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி நமது ஊராட்சியிலேயே மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசு வழங்கும் நிதியினை ஆதரமாக வைத்து மின்சாரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படும். கோடை காலங்களில் ஊராட்சியில் ஏற்படும் குடிநீர் தட்டுபாட்டை சரி செய்வதுடன், இப்பகுதியில் ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டு, அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு, மலர்கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் மின்சாரத்தினை பயன்படுத்தப்படும், ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில் வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு சொந்த வீடு கட்டிதரவும் அதற்கான நிதியினை பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் மூலம் பெற்று செய்து தரப்படும். வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தனி தனியே தினமும் சேகரித்து கலுங்கோடை முழுமையாக சுத்தம் செய்யப்படும். மீண்டும் அசுத்தம் ஆகாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் சிறப்பு அனுமதி பெற்று கூடுதலாக துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஊராட்சி மூலம் பொதுமக்கள் வாங்கும் எந்த வித ஆவணங்களுக்கும் லஞ்சம் வாங்காமல் பொது மக்கள் பயன் பெறும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டங்களை நிறைவேற்றி தோவாளை ஊராட்சியை தன்னிறைவான ஊராட்சியாக மாற்றிட கை உருளை சின்னத்தில் வாக்களிக்களியுங்கள் என்றார்.