×

புழலில் அதிகாலை பயங்கரம் கழுத்தை அறுத்து மனைவி கொலை: போலீசில் கணவன் சரண்

புழல்: புழலில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  புழல் காந்தி தெருவை சேர்ந்தவர் வெற்றிவீரன் (47). பாடியில் உள்ள தனியார்  அச்சகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சஜினி (40). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மணிமொழி (19), சிந்துஜா (17) என்ற மகள்கள் உள்ளனர். தம்பதி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 6 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால், இவர்களின் 2 மகள்கள் ஆவடி அருகே உள்ள அரக்கம்பாக்கத்தில் வெற்றிவீரனின் அக்கா வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகின்றனர்.  இந்நிலையில், மகள்களின் நலன் கருதி வெற்றிவீரன், சஜினி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன்படி கடந்த 15 நாளுக்கு முன், புழல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த வினோத்குமார் என்பவரது வீட்டில் தம்பதி வாடகைக்கு  குடியேறினர்.

நேற்று முன்தினம் இரவு தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் பிறகு கோபித்துக் கொண்டு தனித்தனியே தூங்கியுள்ளனர். அதிகாலை 4 மணிக்கு எழுந்ததும் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளனர்.  இதனால்  ஆத்திரமடைந்த வெற்றிவீரன் சமையல் அறையில் உள்ள கத்தியை எடுத்து வந்து, சஜினியின் கழுத்து மற்றும் வயிறு பகுதிகளில் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சஜினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  பின்னர் வெற்றிவீரன் புழல் காவல் நிலையத்தில் சரணடைந்து நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்.ஐ ஜெயந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சஜினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிவீரனை கைது செய்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் வெற்றிவீரன் கொலை  செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆகவே தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Husband Charan ,
× RELATED புழலில் அதிகாலை பயங்கரம் கழுத்தை அறுத்து மனைவி கொலை: போலீசில் கணவன் சரண்