ராஜபாளையம், டிச.25: ராஜபாளையம் அருகே, கீழராஜகுலராமன் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் காளிமுத்து, திருவில்லிபுத்துார் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் காளீஸ்வரி ஆகியோருக்கு ஆதரவாக தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க மாநில தலைவர் செல்லபாண்டியன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் தனது கழுத்தில் மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்தவாறு, நூதனமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது வாக்காளர்களை கவர்ந்தது.
இது குறித்து செல்லப்பாண்டியன் கூறுகையில், ‘மதுப்பிரியர்கள் மூலம் டாஸ்மாக் வருவாயானது தமிழகத்தில் 36 ஆயிரம் கோடியாக உள்ளது. எங்கள் ஆதரவு பெற்ற பஞ்சாயத்து தலைவரை வெற்றி பெறச்செய்தால் மாநிலத்திலேயே முன்மாதிரியாக, குடிபோதையால் பாதிப்பிற்கு உள்ளான ஆதரவற்ற பெற்றோர், விதவை, அநாதைகளை கணக்கெடுப்போம். பஞ்சாயத்து நிதியிலிருந்து மாதந்தோறும் அவர்களின் வாழ்வாதரத்திற்கு நிதி உதவி செய்ய தீர்மானம் இயற்ற செய்வோம். அத்துடன் முதல் கையெழுத்தாக, மறைந்த முதல்லவர் ஜெயலலிதாவின் கடைசி தேர்தல் அறிக்கையான மதுவால் சீரழிந்தவர்களுக்கான மறுவாழ்வு மையம் அமைப்பதற்கு தீர்மானம் போடப்படும்’ என்றார்.